Thursday 13 September 2018

ஹிப்போவின் குட்மார்னிங்


6. கெட்ட வார்த்தைகள் – 2
‘The analysis of behaviors and reactions was the only objective method
to get insight in the human actions’
‘Psychology no longer be considered the science of mind. Instead,
it should focus on the behavior of the individual, not their consciousness’
                                                                    – Jhon B Watson (1878-1958)
‘குட் மார்னிங் ஃப்ரண்ட்ஸ், (குழந்தைகள் வணக்கம் சொன்னார்கள், பதிலுக்கு வணக்கம் சொன்னேன் என்பதெல்லாம் இனி வரும் கட்டுரைகளில் வேண்டாம் என நினைக்கிறேன்.) நேற்று மதி என்னிடம் வந்து ஒரு ஆலோசனை கேட்டான், அது எல்லோருக்குமே தேவையாக இருக்கலாம் என்பதால், இன்று அதைப்பற்றிப் பேசலாம் என்று தோன்றுகிறது. என்றபடி மதியைப் பார்த்தேன்.

    ‘என்னங்க சார், இப்படி செஞ்சிட்டீங்களே’ என்பதுபோல வெகுவாக நெளிந்தான். அவனைப் பார்வையாலேயே ஆற்றுப்படுத்திவிட்டுத் தொடர்ந்தேன். நேற்றுக் கெட்ட வார்த்தைகள் பற்றிப் பேசினோம் அல்லவா, அது மதியழகனால்தான், என்று நிறுத்தினேன். எல்லோரும் அவனை ஒரு நொடி திரும்பிப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார்கள்.

      “இருங்க, இருங்க… அப்படியே மதியைத் திரும்பிப் பாக்கறீங்க, ஏன் நம்மிடம் அந்தப் பிரச்சனை இல்லையா, சரி போகட்டும்., மதி நேற்றே என்னிடம் வந்து இனி அப்படிப் பேசவே போவதில்லை என்று உறுதியளித்ததோடு, கோபத்தில் அவசரப்பட்டு பேசிவிடுவதைத் தடுக்க வழியும் கேட்டான். அதைத்தான் இப்போது பேசப்போகிறோம்”. என்றபோது மதி சற்று ஆசுவாசமானது தெரிந்தது.
“முதலில், தவறென்று தெரிந்ததும் மாற்றிக்கொள்வதில் தீவிரம் காட்டும் மதிக்கு, எல்லோரும் க்ளாப்ஸ் பண்ணுங்க” என்றேன். எமோஷனல் க்ளாப்ஸ் என்பதால் ஓய நேரமானது. அவன் முதன் முதலாகத் தன்னைப் பெருமிதமாய் உணர்வதைப்போல இருந்தான்.
“சரி, இப்போது நாம், தவறி கெட்ட வார்த்தைகள் பேசிவிடுவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை எப்படி விடுவித்துக்கொள்வது என்று பார்ப்போம். அப்புறம், இது ‘கேர்ல்ஸ்’ க்கும்தான் என்று சொல்லிவிடுகிறேன், ஏனெனில் கெட்ட வார்த்தைகள் என்பது அசிங்கமான வார்த்தைகள் மட்டுமல்ல நாகரீகமற்ற வார்த்தைகளும்தான்”. என்றதும் பிள்ளைகளிடம் குறு குறுப்பு உண்டானது. தொடர்ந்து...
“நான் கேட்பதற்கு எல்லோரும் பதில் சொல்லவேண்டும், உங்களுக்கு உலகத்திலேயே யாரை மிகவும் பிடிக்கும்?” என்றேன். ”அம்மா, அப்பா, மாமா, பாட்டி” என்று வித்விதமான பதில்கள் வந்தன. நான் விளையாட்டாக, “ஏன், என்னைப் பிடிக்காதா” என்று கேட்டதும், “சா…ர், பிடிக்கும்... சார்” என்று கோரஸ் பாடினார்கள் குழந்தைகள்.
குட், ஆனால் கேள்வி அதுயில்லை.
இதுதான், “ஒரு அசிங்கமான அல்லது நாகரீகமற்ற வார்த்தையைப் பேசிவிட்டு, அந்த வாயினாலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த என்னை, ‘சார்’ என்று உரிமையோடு கூப்பிடுகிறீர்களே இது நியாயமா? அதைவிட என்னைப் பெயர் சொல்லியே அழைக்கலாமே…” என்றதும், திகைத்துப் போனார்கள். தொடர்ந்து, “என்னை விடுங்கள், ஒரு கெட்ட வார்த்தையைப் பேசிவிட்டு, வீட்டிற்குச் சென்று அதே வாயினால், அம்மா என்றும் அப்பா என்றும் அழைப்பது அவர்களை கொச்சைப்படுத்துவது இல்லையா” என்று சில விநாடிகள் நிறுத்தினேன்.
வகுப்பறை நிசப்த்தமானது. ஒரு 18 விநாடிகள் இருக்கும் பிள்ளைகளைப் பார்த்தபடியே நின்றேன். “சொல்லுங்கள், அதே நாவினால், அம்மாவை, அப்பாவை, என்னை, இன்னும் உலகத்திலேயே மிகவும் பிடிப்பதாகச் நீங்கள் சொன்ன மற்றவர்களை பாசத்தோடு எப்படி அழைக்கமுடியும்? அது எங்களையெல்லாம் அவமதிப்பதாகாதா? என்று மீண்டும் கேட்டதும் தலைக் கவிழ்ந்தார்கள், அங்கங்கே ‘உச்சுக் கொட்டும்’ சப்தமும் கேட்டது.
“சரி விடுங்கள், இனி நாம் அப்படி இருக்கப் போவதில்லை., மதி நேற்று வருந்தியதோடு, தவறுதலாக பேசிவிடுவதையும் தவிர்க்க வழி கேட்டான், உங்களுக்கும் சேர்த்துச் சொல்கிறேன், முயன்று பாருங்கள்., எப்போதேனும் நீங்கள் கோபத்தில் அநாகரீகமாகப் பேசிவிட நேர்ந்தால் சற்று நிதானித்து உடனே நீங்கள் சொன்ன மிகப் பிடித்தமானவரின் முகத்தை கண்கள் மூடி மனதுக்குள் கொண்டுவாருங்கள், ஒரு வேளை கட்டுப்படுத்தவே முடியாமல் ஏதேனும் பேசிவிட்டாலும் பரவாயில்லை, பேசியபின் என்றாலும் அவர்களின் முகங்களை நினைத்துக்கொள்ளுங்கள். போதும் அவ்வளவுதான்.

இப்போது முடிவெடுங்கள், கெட்ட வார்த்தைகள் பேசுவது பற்றி, நீங்கள் பேசமாட்டீர்கள், உங்களால் முடியாது, நீங்கள் குழந்தைகள்” என்று முடித்துக்கொண்டேன்.
குழந்தைகளை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பது, நம்மை எப்படி டிசைன் செய்திருக்கிறோம் என்பதன் வெளிப்பாடு என்று அப்போது எனக்குப் புரிந்தது. நான் குழந்தைகளுக்குச் சொன்ன யுக்தியை முதலில் நானே கடைபிடிக்க வேண்டுமென நினைத்துக்கொண்டேன்.
‘குறுக்குச் சந்திலிருந்து திடீரென்று சாலைக்கு வந்துவிட்ட ஒருவன், நிலைக்குலைந்து ப்ரேக் பிடித்த நம்மைக் குற்றவாளியாகப் பார்க்கும்போது, வரிசையில் காத்திருக்கையில் யாரேனும் நம்மை முந்திச் செல்ல முனைகிறபோது, என பலச் சூழல்களில், நமது பக்கம் நியாயம் இருப்பதாக நாம் நம்பிவிடுகையில் அந்த நிம்மதித் தருகிற துணிச்சலின் முதல் காரியம் ஒரு கெட்டவார்த்தையாகத்தான் இருக்கும் இல்லையா?
பிள்ளைகளுக்காக யோசிக்கும்போதுதான் நாம் முதலிலிருந்து வளரவேண்டும் என்பது எனக்குப் புரிய ஆரம்பித்தது. ஆக உங்களுக்கும் இதுதான், ஒரு அவதூறைப் பேசிவிடுகிறபோது அல்லது அதற்கானச் சூழலின் போது நினைத்துக்கொள்ளுங்கள் உங்கள் மகளை, மகனை, மனைவியை.
நான் ஆரம்பித்துவிட்டேன்.
தேங்க்ஸ் டு மதி.
‘ஒரு பத்து நாட்கள் கடந்திருக்கும், வழக்கம் போலான பள்ளி முடிந்த மாலை நேரத்தில் மதி வந்தான். சிவந்திருந்த அவனதுக் கண்கள் அழுதிருப்பதைச் சொல்லிவிட்டன’.
“என்னடா ஆச்சு”, “இல்லைங்க சார்…” என்று ஆரம்பிக்கும்போதே அவனதுக் கண்கள் மீண்டும் பொத்துக்கொண்டன. “டேய்…, என்னயிது இங்க வா, என்ன ஆச்சு” என்று தோளோடு அணைத்துக்கொண்டேன். “சார்… சார்… இன்னிக்கு நான் தப்பா பேசிட்டேன் சார், அப்புறம் நீங்க சொன்னது போல் பிடித்தவங்களை நினைத்துக்கொண்டேன்” என்று தேம்பினான். “சரி, அழாத, வெரி குட், பரவாயில்லை விடு சரியாகிடும்” என்று தேற்றிக்கொண்டே யாரை நினைச்சுக்கிட்ட?” என்றேன் (ஒரு பேராசைதான்).
“அம்மாவை சார்…” என்று மீண்டும் கண்ணீர் மல்கினான் குழந்தை. “சூப்பர் டா, அவ்வளவுதான், நான் அப்பவே சொன்னென் இல்ல, இதுதான் நீ. இனி இந்தப் பிரச்சனை உன்னை விட்டு ஓடியேப் போய்விடும். ரிலாக்ஸ்”. என்று பூரித்தேன். நெகிழ்வாக இருந்தது. அவனை ஆறுதல் சொல்லி அனுப்பியதும் ஒரு யோசனை தோன்றியது. வருகைப் பதிவேட்டை எடுத்து, நம்பர் தேடி மதி வீட்டிற்கு போன் செய்தேன். எதிர் பார்த்தபடியே அவனது அம்மாதான் எடுத்தார்.
‘எப்போது பள்ளிக்கு வந்தாலும் அவங்களுக்கு மதியின்மீது ஒரே குறைதான்.’  “வீடு தங்க மாட்றான் சார், புதுசு புதுசா யாரோ பசங்கள ஃப்ரண்ட்ஸ் னு வீட்டுக்கு கூட்டிவரான், புக்க எடுக்கறதே இல்ல” என்று புகார் பட்டியல் நீளும்.
அவரிடம் கெட்டவர்த்தைகள் விஷயத்தை விளக்கி, இன்று நடந்ததையும் சொல்லி முடித்தேன். மற்றதையெல்லாம் இயல்பாகக் கேட்டு “நல்லாதான் இருக்குங்க சார்” என்றவர், அவன் அம்மாவைப் பிடிக்கும் என்று சொன்னதைக் கேட்டவுடன், “அப்படியா சார் சொன்னான், என்று நெகிழ்ந்தார். அதன் பிறகு... 

‘மதிக்கு ஒரு புது அம்மாவும், எனக்கு ஒரு புது மதியும்…’
இப்போதெல்லாம் அப்படி இப்படி ஏதேனும் பேசிவிடுகையில், மதியழகன் நினைவுக்கு வந்து “என்னங்க சார்” என்கிறான்.

No comments:

Post a Comment