Monday 10 September 2018

மூத்த தாய் - பழையோள்


பழையோள் (மூத்த தேவி) மூதேவி ஆகிவிட்டக் கதை…



லகின் முதல் மனிதன் ஒரு பெண் என்கின்றன புவியியல் ஆய்வுகள். சுமார் 3 லட்சம்வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் தெத்திக் கடலாக மாறியிருக்கும் பாந்த்த லசாவை அல்லது பழங்கடலை நோக்கி ஒரு உயிர் மலைச்சரிவுகளிலிருந்து இறங்குகிறது, சரிவுகளில் வியாபிக்கும் புவியீர்ப்பு விசையினை சமாளிக்க தனது பாதங்ளை படர்த்தி அழுத்தி ஊன்றுகிறது. ஆனால் அப்போது அதற்கு தெரிந்திருக்காது பின்னாளில் தனது சுவடுகள் மனித முகவரிக்கான ஒரு குறியீடாக மாறப்போகிறது என்பது.

ஆம், ஹோமினிட், ஹோமினின், ஹோமோ எரக்ட்ஸ் என இன்னும் பலவாக வகைப்படுத்தப்பட்ட மனித மூதாதையராகக் கருதப்படும் குரங்கினத்தின் சுவடுகளைத் தவிர மரபனுக் கூறுகளின்படி அந்த பாதச் சுவடுகளுக்கு முன்பான தொன்மையான மனிதச் சுவடுகள் அதாவது குரங்கு மூதாதையர் வகைகளிலிருந்து பரிணாமம் பெற்றிருந்த மனிதச் சுவடுகள் உலகின் எந்தப் பகுதியிலும் கிடைத்திருக்கவில்லை என்கின்றன தொல்லியல் ஆய்வுகள்.

அப்படி முதலாவதாகக் கிடைத்த அந்த மனிதக் கால் தடத்தை ஆய்வுசெய்த தொல்லியலாளர்கள் பலத் தரவுகளை ஆய்ந்து பின் ஒருங்கிணைந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள், அந்தக் கால் தடம் ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது என அறிவிக்கிறார்கள். ஆணில்லாமல் எப்படி பிற மனிதர்கள் தோன்றினார்கள் ? என்று கேட்டால்… இதெல்லாம் ஒரு கேள்வியே இல்லை என்றுதான் சொல்லமுடியும், தனக்குள்ளேயே சூல் கொண்டு பெற்றுக்கொள்ளும் உயிர்களைப் பற்றிய நிரூபனங்கள் நிறையத் தரப்பட்டுள்ளன.

ஆண்மை என்பது ஆண் தன்மையில் இல்லை என்பதற்கான நிரூபனங்கள் அவை. போச்சா…?!

சரி நம் தாயைப் பற்றிப் பார்ப்போம். தாய் தெய்வ வழிபாடு என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது அறிந்த ஒன்றுதான். ஆனால் ஏன் தாய் தெய்வம் ?! என்கிற கேள்வி எழுகிற போதுதான் முதல் மனிதன் பெண் என்கிற தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது. இன்றைக்கு ஆய்வுகளின்படி நாம் இதனை ஏற்றுக்கொண்டாலும், ஆய்வுகளுக்கு முன்னரே அதாவது நாடோடிகள் வாழ்க்கை முறையிலிருந்து சமூகமாக வாழ்வெதென்று மனிதன் முடிவெடுத்தபோது தாய் தெய்வ வழிபாடு என்கிற வாழ்க்கை முறையின் வழியே நம் மூதாதையர் முதல் மனிதன் பெண்தான் என்பதை நிருவிவிட்டார்கள் என்று கருதலாம். ஆய்வுகள் என்பதே இருக்கிற ஒன்றை”ஆமாம் ! இருக்கிறது!!” என்று சொல்வதுதானே., ஈர்ப்பு விசையை, மின் காந்தப் புலத்தை, செல் பிரிதலை, கண்டுபிடித்தார்களே தவிர உருவாக்கவில்லையே…! அப்படித்தானே முதல் பெண்ணும் ?!

அந்த முதல் தாய் தனக்குள்ளேயே சூல்கொண்டு தானே பெற்றுக்கொண்டக் குழந்தை எல்லாவற்றிற்கும் காரணமாக தனது தாயை கருதியிருக்கும். அந்தக் குழந்தை வளர்ந்து தனது தெய்வத்தை சந்ததியருக்கு அறிமுகம் செய்திருக்கும். கூட்டம் பெருகி, தொகையாகி, கிராமம், நகரம், பெருநகரமாகி மாநிலம், நாடாகி… அந்த முதல் தெய்வம் மரியாகினாள், மாரியாகினாள் ?! எனில் தாய் பழையோளை வழிபடுவது என்பது நமது தாய்க்கெல்லாம் தாயை வணங்குவது என்றாகிறது. ஒரு தாய் மக்கள் நாம்.

நாகரிகம் வளர்ச்சியடைந்து சிலை வடிக்கக் கற்றுக்கொண்டபோது மனிதன் மூத்ததேவிய செதுக்கியிருக்கலாம். ஆனால் அவள் முன்பிருந்தே வணங்கப்பட்டு வந்தவள். மூத்த தேவி, பழையோள், கேட்டை, மாமுகடி… என பதினாறு வகைப் பெயர்களால் காலங்களில் குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறாள்.

அன்பின் தெய்வமாக, வழிகாட்டுதலின் தெய்வமாக, வெற்றிக்கான தெய்வமாக, வளங்களின் தெய்வமாக, விளைச்சலின் தெய்வமாக, தீமைகளிலிருந்து காக்கும் தெய்வமாக மூத்த தேவி என்கிற பழையோள். சுருக்கமாகச் சொல்வதென்றால் வாழ்வியலின் தெய்வமாக தாய் பழையோள் காலந்தோறும் வணங்கப்பட்டிருக்கிறாள். எந்தவொரு செயலைத் துவங்கும் முன்னும் பழையோளை வணங்கியிருக்கிறார்கள் நம் முன்னோர். வேட்டைக்கு செல்லுமுன் ஆயுதங்களை அவளதுக் கையில் வைத்து வாழ்த்து பெற்றிருக்கிறார்கள், படைத் தலைவன் வெற்றிக்கு துணை நிற்க அழைத்திருக்கிறான், விவசாயிகள் தானியங்களை அவளதுக் கரத்தில் வைத்து வணங்கிவிட்டு விதைத்திருக்கிறார்கள்.

வழிபடுதல் என்பது வெற்றுச் சடங்குகளாக, கற்பனை தெய்வீகத் தன்மையாக, பொறுப்புகளை ஒப்புக்கொடுக்கும் சம்பிரதாயங்களாக சுருங்கியிராதக் காலத்தில், நமது அன்றாடங்களை உந்திச் செல்லும் உள்ளுணர்வாக அல்லது நம்பிக்கையாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தக் காலம் அது. அப்போதுதான் கேட்டை வணங்கப்பட்டிருக்கிறாள். இந்தியாவில் பல இடங்களில் பழையோளுக்குத் தனியே கோயில் அமைத்திருக்கிறார்கள், அந்தந்த காலகட்டங்களின் கற்பிதங்களுக்கு ஏற்ப சிலையும் வடித்திருக்கிறார்கள்.

கி.பி. 11 ம் நூற்றாண்டு வரையிலும் கூட பழையோளின் புகழ் ஓங்கியிருந்திருக்கிறது.

அதன் பிறகு தெய்வங்களின் தேவை பல்கிப் பெருகுகிறது, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பிரத்தியேகமாக தனித்தனித் தெய்வங்கள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள் (பிற்கால சோழர்களின் காலம் வரை கணேசன் நம்ம ஊருக்கு வரவில்லை என்கிறது வரலாறு). அரூபக் கதைகளும் மாய தந்திர அற்புதங்களும் கற்பிக்கப்படுகின்றன, வழிபாட்டுச் சடங்குகள் புதிதாய் வகுக்கப்படுகின்றன. தெய்வங்கள் செயல்களுக்கு துணை நிற்பது என்கிற நிலையில் இருந்து மாறி ஆவற்றை செய்துமுடித்துத் தரவேண்டும் என்பதாக வழிபாட்டு முறைகள் மாறின.

வர்ணங்களின் ஆதிக்கம் மிகுந்தபோது ‘நீ அடிமை என்பதைவிட உனக்கு அடிமைகள் இருக்கிறார்கள்’ என்று குஷியேற்றப்பட்ட மனிதனால் (அரசன் உட்பட) சமயங்கள், சாதிகள், இனங்கள் என்பவை நம்பப்படுகின்றன. தெய்வங்கள் கட்டிடங்களுள் சிறைவைக்கப் படுகிறார்கள் முன்னோர்களின் தெய்வங்கள் ஊருக்கு வெளியே விரட்டியடிக்கப் படுகிறார்கள்.

இந்நிலையில்தான் ஏற்கனவே விளைச்சலுக்குத் துணையாக கழனிகளிலும், களங்களில் துணையாக எல்லைகளிலும் அமைத்திருந்த உலகின் முதல் பெண், பழையோள், மூத்த தேவி… ஆங்காங்கே கைவிடப்பட்டதோடு மூதேவி ஆக்கப்படுகிறாள்.

மூத்த தேவி அவளது வழமையான இருத்தலுக்கு நேரெதிராகக் கற்பிக்கப்படுகிறாள். அபசகுனத்தின், சோம்பலின், தோல்வியின், அசட்டுத்தனத்தின், தலை சொறிவதின், கொட்டாவி விடுவதின், தூங்கி வழிவதின் தெய்வமாக்கப்படுகிறாள். அதற்க்கேற்றார்போல் தொந்தி பருத்த விகாரமான வடிவம் கொண்ட பெண்ணாகவும் சிலைகளில் வடிக்கப்படுகிறாள். நாம், அழகிய வடிவங்களோடு அற்புதமான கதைகளோடு புதிதாக வழங்கப்பட்ட தெய்வங்களுக்குப் பிறந்தநாள் விழாக் கொண்டாட கட்டமைக்கப்பட்டுவிட்டோம்.

தோழர் செஞ்சி தமிழினியன் அவர்களோடான ஒரு தொல்லியல் பயணத்தில் தொண்டூர் அடைந்த்போது பல்லவர் காலத்தைச் சேர்ந்த, ஒரு பெரும்பாறையில் செதுக்கப்பட்ட அரங்கன், தாய்ப் பாறை ஆகியவற்றை கண்டோம். அந்த இடத்தில் எங்களோடு இருந்த ஊர்க்காரரிடம் இதுபோன்று வேறு ஏதாவது பழமையான சிலை, கல் வெட்டு, ஏதேனும் இங்கு இருக்கிறதா என்று கேட்டபோது அவர் ஏமாற்றாமல் ஒரு இரண்டு மூன்று இடங்களைச் சொல்லி அவற்றைக் காண்பிக்க ஒரு குட்டித் தம்பி சா. கே. சிவா வை அனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன முதல் இடத்தில் ஒரு பெரும்பாறையில் 15 உயரத்தில் இருந்த கல்வெட்டைப் படம் எடுத்துக்கொண்டு சென்ற அடுத்த இடத்தில்தான் வெட்டவெளியில் ஒரு வேப்பமரத்தினடியில் எவ்வித அக்கறையுமின்றி இருந்த  இந்தச் சிலையினைக் கண்டோம் இதன் அருகில் ஒரு பெண் தெய்வச் சிலையும், சிறு கல்வெட்டும் இருந்தது. அங்கிருந்தப் பெரியவர் இதனை அய்யனார் என்றார், இல்லையே இது பெண் வடிவமாக இருக்கிறதே என்றபோது அவருக்கு ஒன்றும் புரிபடவில்லை.

அங்கிருந்து இன்னொரு பாறைக்கு சிவா கூட்டிச் சென்றான் பாறையில் கல்வெட்டும் அதன் மேல் காய்ந்த மலம் நிறைந்திருக்க அக்ற்றிவிட்டு படம் பிடித்தோம். அங்கிருந்து சிவா ஒரு சிறு குன்றுக்கு கூட்டிச்சென்றான் அங்கிருந்த குகை ஒன்றில் உடல் சிலிர்க்கச் செய்யும் அற்புதமான சமணப் படுக்கைகளையும் பாறையில் செதுக்கப்பட்ட பார்சுவநாதர் சிலையையும் சிதைந்த கி.மு. 2 நூற்றாண்டைச் சேர்ந்தக் கல்வெட்டு ஒன்றையும் படம்பிடித்துக்கொண்டு திரும்பினோம்.

எல்லாவற்றிலும் ஆச்சர்யம் தம்பி சிவா தான், விளையாடை விட்டு கொஞ்சமும் சலிக்காமல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் கூடவே ஆர்வமோடும்  இருந்தான், வேறு வழி திரும்ப திட்டமிட்டதால் அவனை ஊருக்குள் அழைத்துச் சென்று விட்டுத் திரும்புகையில் பர்சை தொட்டேன்… ‘உனக்கு எவ்வளவு திமிர்டா என்றது மனம்” வண்டியில் அமர்ந்தபடியே திருப்பி பார்க்கையில் துள்ளியோடிக்கொண்டிருந்தான்.
நாளைக்கு வகுப்பில் அவனுக்குச் சிலைகள், கல்வெட்டுகல், சமணப் படுக்கைகளோடு எனது புல்லட்டும் தோழர் தமிழினியன் கொடுத்த மாம்பழமும் ஒரு கதையாகும் என்கிற நம்பிக்கையில் திரும்பினேன்.

அந்த அய்யனார் சிலை மட்டும் இரவெல்லாம் அலைகழிக்க காலையில் எழுந்தவுடன் தோழர் புதுஎழுத்து மனோன்மணி அவர்களுக்கு படத்தை அனுப்பி தகவல் கேட்க, ஆஹா அற்புதமான நமது தாய் தெவத்தை அறிமுகம் செய்தார். இது மூத்த தேவி சிலை என்றும் 5 அல்லது 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் பல்லவர் வடித்தச் சிலையாக இருக்கலாம் என்று சொன்னதோடு கையில் காக்கைக் கொடி, கழுதை வாகனம், மகன் மாந்தன் மகள் மாந்தியோடு சிலை இருப்பதாகவும் சொன்னார். செஞ்சிக்கு வருகிறேன் இன்னும் தேடுவோம் என்றும் அவர் சொன்னபோது உற்சாகமாகியது.

No comments:

Post a Comment